Thursday, February 28, 2013

குழந்தைகளைத்தேடும் கடவுள் நூல் விமர்சனம் 
நூல் குழந்தைகளைத் தேடும் கடவுள் 
ஆசிரியர்; கவிஞர் ச.கோபிநாத் 
விமர்சனம்:கவிஞர் வாலிதாசன் 

நடுநிசிக் காலப்பொழுதொன்றின் அமைதியின் இன்பத்தை அனுபவிப்பவனாய் இந்தக் குழந்தைகளைத்தேடும் கடவுள் நூல் வாசித்தபொழுது உணர்ந்தேன்,வெளிக்கொணர இயலாத வெட்கத்தையும் வேதனையும் நிறைந்ததைப் போல் அமைந்திருந்தன, முகப்பு அட்டைப் படம், இந்த நூலினை முற்ற முழுக்கப் படித்தால் நான் சொல்லும் கருத்துப் புலனாகும்,பேரின்ப வாழ்க்கையென்பதை குழந்தைப் பருவ மகிழ்வென அறிகிறோம், நன்றாக உற்றுக்கவனித்தால் குழந்தைப் பருவம் மட்டும் தான் முதுமைப் பருவம் வரை வரும்,இடையிடையே வரும் பருவங்கள் ஒவ்வொரு பருவம் கடந்த பொழுதும் காலப்போக்கில் காணாமல் போய்விடும்.குழந்தைகளின் ஆன்மா கொஞ்ச கொஞ்சமாக அல்லாமல் வேகவேகமாக அழிக்கப்பட்டு வருகின்றது என்பதைஇவரின் அநேகக் கவிதைக்காட்டுகிறது. 

இந்தநூலில் இடம் பெற்றுள்ள நூற்றைம்பத்தாறு குறுங்கவிதைகளில் போற்றத்தக்க கவிதைகள் பலவும் விமர்சனத்துக்குரிய இருபது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. கவிதை நூலில் கவனிக்கப்படக்கூடிய கவனத்துக்குரிய பாடுபொருள் தேர்வு தான் அதை சாத்தியப்படுத்தும், அதை நூலாசிரியர் கவனமாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். நூலின் கவிதைகளுக்குள்ளே நாம் திறந்த மனதோடு செல்கையில் வரும் போது நிறையப் பொருளோடு மனதில் கொண்டு வர இதில் பல இருக்கின்றன. 
திசைத் திரும்பின 
தாகத்துடன் பறவைகள் 
வறண்ட குளம் 
இந்தக் கவிதை நேரடியாக ஒரு பொருளையும் குறியீடாக மற்றொரு பொருளையும் தருகிறது, தாகத்தோடு வந்த பறவைகள் வறண்ட குளத்தைக் கண்டு திரும்பின இப்படியொரு கோணத்திலும், மற்றொரு வகையில் அந்தப் பறவை இங்கிருக்கும் போது குளம் நிறைய நீர் இருந்து, அது இடம்விட்டு வெளியே சென்ற பின் அலைந்து திரிந்து பல நாள் கழித்து தாகம் வாட்டி தன் பூர்வீக இடம் நோக்கி வருகின்ற காலத்தில் குளம் வறண்டு இருக்கிறதைக் காட்சிப் பிடித்திருப்பது என் இதயக்கேமிரா கவனமாகவும் அதையும் தாண்டி மீண்டும் பதிவு செய்து மகிழ்கிறது. 

குழந்தகளுக்கான மனநிலை குழந்தைகளுக்கானதாக இல்லையென்பது இந்தச் சமூகம் திணிக்கிற அழுத்தங்களும் அபகரிப்புகளும் தான் என்பதை நூலில் பல இடங்களில் ஆதங்கக் கோபமிடுகிறார் கவிஞர். முன்னம் சிறார்களுக்கு பொறுமை குணம்,பக்குவப்படல், சகிப்புத்தன்மை,தேடுதல் நோக்கம் போதித்தது விளையாட்டுகள், மண்சார்ந்த விளையாட்டுக்கள், ஆனால் இன்று வணிக விளையாட்டுகளால் குழந்தைகள் மதிபிறழ்ச்சிக்கு ஆளாகுகின்றனர், கணினி விளையாட்டில் அனைத்துவித ஆசைகளும் குழந்தைகளுக்கான குணநலன்களையே சூறையாடுகின்றன வணிக விளையாட்டுகள் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக 
விளையாட்டு 
வணிகமானது 
மட்டைப் பந்து 
மட்டைப் பந்து மட்டுமல்ல வணிக விளையாட்டுகள் அனைத்துமே. 

இருபத்தியோறாம் நூற்றாண்டு வரை தொடர்கிற மகாஅவலமானது, கருக்கலைப்பு நடப்பது, கவிஞர் முகுந்தராஜன் அவர்கள் பெண்சிசு பற்றி அவளது தாய் புரிதலுற்றதைக் கூறும் அழகான கவிதை 
மருமகள் வீசிய 
இட்லியில் 
கள்ளிப்பால் கொடுத்து 
கதை முடித்த 
மகளின் முகம் நிழலாய். 
என்கிற கவிதைதான் நினைவுக்கு வருகிறது, அன்று கள்ளிப்பால் கொடுத்து பெண்சிசுவைக் கொன்றனர்,ஆனால் இன்று மாதமாக இருக்கும் போதே இந்த அறிவியல் துணையோடு அழிப்பு வேலை நடப்பதை மூன்று நாலைந்து கவிதைகளில் குறிப்பிடுகிறார் 
மருத்துவமனைகள் 
சவக்கிடங்கானது 
கருக்கலைப்பு. 
இக்கால நாகரீகப்போக்கின் இலட்சணத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார் சமூக அக்கறையுடன் கவிஞர். 

அதிகம் பாடப்பட்டும் 
அழகும் குன்றவில்லை 
நிலா.
இந்தக் கவிதையில் கவிஞருக்கு ஒரு வினாவை வைக்கிறேன் அதிகம் பாடினால் அழகு குன்றுமென யார் சொன்னது? உண்மையின் அழகு ஒரு போதும் கெடாது. 

இந்தக் காலம் இணைய காலம், இளையதலைமுறையினர் பலர் இணையத்தால் தான் சீரழிகின்றனர் என்ற பொதுவான கருத்து நிலவினாலும் மாற்றுச் சிந்தனையுடன் கவிஞர் சொல்வதைக் காண்போம். 
நன்று தீது 
நம் தேடலில் 
இணையம் 
இது தான் ஞானப்பார்வையோடு சிந்தித்தல் என்பது ஒரு பக்கம் பார்க்காமல் இரண்டு பக்கமும் பார்த்துக் கூறுவது அதைச் சரியாகக் கவிஞர் எடுத்துக்காட்டியுள்ளார். நல்லதும் கெட்டதும் நம் கையிலே தான் என்பதை புரிய வைக்கிறார். 

என்னளவில் நடப்பு நிகழ்வைப் பாடாதக் கவிஞனை கவிஞனென்றே மதிப்பதில்லை, இந்தச் சமூகம் அவனுக்கு கொடுக்கிற மதிப்பில், அந்தச் சமூகத்தின் மீது அக்கவிஞனுக்கு அதைவிட அக்கறையும் பொறுப்புணர்வும் அதிகம் வேண்டுமெனக் கருதுவேன் நான். இதைக் கூர்ந்து வாசித்தால் இந்தக் கவிதையின் பொருள் புலப்பாடு அறிய வரும். 
அம்புகள் தோய்ந்த 
சமாதனப் புறாக்கள் 
வன்ம நிலம் 
கண் முன் இலங்கை அட்டூழியம் விரிகிறது, சமாதனப் போர்வையில் வல்லாதிக்க நாடுகளும் இலங்கைக்குத் துணை நின்று தமிழீழப் போரை நடத்தி அழித்தொழித்தன இக்கவிதை மூலம் ஈழநிலம் குறித்து பொறுப்புணர்வோடு பதிவிட்டுள்ளார். 

நெடுந்தூரப் பயணம் 
துணைக்கு வந்தன 
நினைவுகள்/ 
இறகுகளின் அடியில் 
இளைப்பாறுகின்றது 
தாய்மையின் கொடை/ 
உதிரும் இலை 
தாயாய் தாங்கியது 
நிலம்/ 
மனம் கவர்ந்து கவிதைகள் இது போல நிறைய உள்ளன. 

குறுங் கவிதை வாசித்த கணம் அதிகம் நினைவில் நெஞ்சில் பாதித்த கவிதை ஏராளமாக இந்நூலில் இருக்கின்றன, கூறியது கூறல் குற்றமாகி விடும் வண்ணமாக கருக்கலைப்பு, சலனம், குழந்தை விளையாட்டு சில வார்த்தைகள் கவிதைகளில் மீண்டும் மீண்டும் வந்து சலிப்படையச் செய்துவிடுகிறது, வரும் காலங்களில் தவிர்த்து மேன்மை அடைய, சாதனைகள் பல புரிய வாழ்த்துகள். குழந்தை மனசுக்கார கவிஞரை கடவுள் கண்டிப்பாக பாராட்டி மகிழத்தேடுவார்.

Thanks
http://eluthu.com/kavithai/110136.html

Wednesday, February 20, 2013



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

விடியலை நோக்கி…

சிறுகதைத் தொகுப்பு
க. ராகிலா M.A., B.Ed., M.T.,

120 பக்கங்கள்
விலை ரூ. 60 / -

படைப்பிலக்கியப் பரிவுகளான கதை, கவிதை, கட்டுரை, நாடகம், புதினம், ஆய்வுகள் எனப்பலவற்றுள் கதைக்கு என்றொரு தனித்துவம் உண்டு.

இன்றைக்கு எந்தவொரு பத்திரிக்கையை எடுத்தாலும் குட்டிக்கதை, அரைப்பக்கக் கதை, ஒரு பக்கக்கதை, சற்றே நீளமான சிறுகதை என ஏதோவொரு வகையில் சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லியபடி கதைகள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

ஒரு கதையைப் படித்து முடித்ததும், அது வாசகனின் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தால், அதே கதையை மீண்டும் படிக்க வேண்டும் எனும் விழைவை அவனுக்கு உண்டாக்கினால், அதனை சிறந்த சிறுகதையாகக் கொள்ளலாம் என்பது நியதி.

எழுத்தாளார் திருமதி. க. ராகிலா M.A., B.Ed., M.T., அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விடியலை நோக்கி…’ நூலின் அமைந்துள்ள சிறுகதைகள் சிறந்த சிறுகதைக்கான இலக்கணத்தைப் பெற்று சிறப்படைந்திருக்கின்றன.

தான் கேட்ட, பார்த்த, அனுபவித்த விஷயங்களை ஒரு சிறுகதையாக வெளிப்படுத்தும் கதை சொல்லியின் பாங்கு இவருக்கு நன்கு கைவரப் பெற்றிருப்பது, இந்நூலுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

-    வாசகன் பதிப்பகத்தார்
நூலின் பதிப்புரையில்…

விடியலை நோக்கி என்ற திருமதி க. ராகிலாவின் சிறுகதைத் தொகுப்பு. ஓர் அறிவுக்களஞ்சியம். மக்களாய் சிந்திக்கத் தூண்டும் திறன் கொண்டது.

மனித வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் எவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் சிறுகதைகளாக வடித்திருப்பது அவரின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் காட்டுகின்றாது. சமுதாய நோக்கோடு எழுதப்பட்ட இந்த சிறுகதைகள் நிச்சயம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என் எண்ணம்.

-    Dr. P. விஜயன்
முதல் துணைவேந்தர்
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்
சென்னை
 நூலின் அணிந்துரையில்…

விடியலை நோக்கி என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கையில் ஒரு கிராமத்திலேயே இருக்கும் உணர்வே ஏற்பட்டது. குடும்பப் பிரச்சனைகள், காதல், திருமண விவகாரங்க்கள், மாமியார் மருமகள் சிக்கல்கள், முதியோர் பிரச்சனைகள், அருகருகே உள்ள வீடுகளில் ஏற்படும் சண்டைகள், விவசாய நடைமுறைகள், குழந்தைகள் படிப்பு, கிராம சமூக அமைப்பு இப்படியாக பற்பல செய்திகளை மிக எளிய அழகிய நடையில் சகோதரி க. ராகிலா எழுதியுள்ளார்.

மூட நம்பிக்கைகள், கிராம கோவில்கள் என ஒன்றுவிடாமல் மொத்த கிராமத்தையே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். பல்வேறு சிக்கல்களுக்கு நல்ல நடைமுறைத் தீர்வுகளைத் தந்துள்ளார்.

-    ‘சாகித்ய அகாடமி விருதாளர்’
குறிஞ்சிச்செல்வர் கோ. மா. கோதண்டம்
தலைவர்
மணிமேகலை மன்றம்
நூலின் அணிந்துரையில்…

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

Sunday, February 3, 2013


நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு
கவித்தென்றல்
கவிஞர் பி. மாரியம்மாள்

விலை ரூ. 30 -

“கவிதைகளின் நயமும், வார்த்தைகளின் நேர்த்தியும், கருத்தாழமும் இவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவிருப்பதை பறைசாற்றுகின்றன.

முதல் நூலிலேயே பக்குவப்பட்ட கவிதைகள் தென்படுவது நிச்சயம் வாசகர்களுக்கு நிறைவயளிக்கும்.”

-    வாசகன் பதிப்பக பதிப்பாசிரியர்
பதிப்புரையில்

“கவிஞர் பி. மாரியம்மாளின் அனைத்து கவிதைகளிலும் சமுதாய சிந்தனைகளையும் இயற்கையின் பெருமைகளையும் இணைத்து படைத்துள்ளார். இளம் கவிஞர் வெளியிடும் இக்கவிதைகள் பயில்வோர் அனைவருக்கும் கவி ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. இவரது படைப்பின் முதல்படியான இந்த புத்தகமே அருமையாகவும் பெருமை கொண்டதாகவும் உள்ளது.”

-    முனைவர் எஸ். சுமதி
அமர்சேவா சங்க செயற்குழு உறுப்பினர்
நூலின் அணிந்துரையில்

“முதல் தொகுப்பிலேயே நம்பிக்கையூட்டக்கூடிய நல்ல கவிதைகளைத் தந்துள்ளார். இந்த நம்பிக்கை, கவிதைகளின் மீது மட்டுமல்லாமல், அவரும் சிறந்ததொரு கவிஞராக பரிணமிப்பார் என்பதற்கும் சேர்த்தும்தான்.

மாரியம்மாளின் பெரும்பாலான கவிதைகளில் தன்னம்பிக்கைச் சுடர் பிரகாசமாக ஒளியினை வீசுகிறது. அந்த ஒளி மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான தீபச்சுடர்.”

-    கவிஞர் சூர்யநிலா
நூலின் அணிந்துரையில்
நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com