Friday, January 31, 2014


நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

ஆணுக்கும் கற்பு உண்டு

ISBN 978-93-83188-04-8

சிறுகதைத் தொகுப்பு
யோகி ஸ்ரீ ராமானந்த குரு

128 பக்கங்கள்
விலை ரூ. 60 / -

“கதைகளின் அடிநாதம் கலை என்பது மக்களுக்காகவே என்பதுதான். அதனால் தான் அவை சமூகத்தால் கவனிக்கப்பட்டும், விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டும், கெளரவம் அடைகின்றன.

யோகி ஸ்ரீ ராமனாந்த குரு அவர்களின் ஆணுக்கும் கற்பு உண்டு எனும் இந்நூலில் பத்து சிறப்பான சிறுகதைகள் அமைந்துள்ளன. இக்கதைகள் அனைத்தும் நிகழ்காலத்தில் நம்மைச்சுற்றி வாழும் கதாப்பாத்திரங்களின் அடிப்படையில் அமைந்து, நம் நெஞ்சத்திற்கு நெருக்கமாகின்றன.”

-    வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்
நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697
www.vasaganpathippagam.blogspot.com


 


                    இப்படிக்குத் தோழன் - நூலாய்வு!

நூல் ஆசிரியர் - கவிஞர் ஏகலைவன் !

நூல் விமர்சனம்  -கவிஞர் இரா .இரவி !


வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு .சேலம் .636015. செல் 8682994697 

தனது பள்ளி , கல்லூரி தோழிகளை நினைவு கூர்ந்து வடித்த புதுக்கவிதை நூல் .கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .நூல் ஆசிரியரே பதிப்பாளர் என்பதால் நினைத்தபடி மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளார் .புகைப்படங்கள் அட்டைப்பட வடிவமைப்பு  உள்அச்சு யாவும் மிக நன்று . சிறப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .

முகநூலில் ஆண் பெண் இருபாலரும் ஏன் ? முன்றாம் பாலான திரு நங்கைகளும் தோழமையோடு கருத்துக்களைப் பகிர்ந்து வரும் காலம் இது .முக நூலால் சில தீமைகள் வந்த போதும் ,பல நன்மைகள் உள்ளன என்பது உண்மை .நட்பின் மேன்மையை உணர்த்தும் நூல் .

தன்னம்பிக்கை எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்களின் அணிந்துரையும் ,காந்தி கிராமியப் பல்கலைக் கழகத்தின் துறைத் தலைவர் முனைவர் அ .ஜாஹிதா பேகம் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உள்ளன .

காகங்கள் ஒற்றுமையாக உள்ளன .மனிதர்களுக்கு ஒற்றுமை இல்லை என்றே பலரும் சொல்லி உள்ளனர் .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் மாற்றி யோசித்து புதுக் கவிதை வடித்துள்ளார் .

ஒரே கடலை மிட்டாயை
காக்கா கடி கடித்து
புன்னகையோடு
பங்கிட்டுக் கொள்ளும்
நம்மைக் கண்டு
காக்கைகளும்
பெறுகின்றன
தோழமையுணர்வை !

நூல் படிக்கும் வாசகர்களுக்கு குழந்தை காலத்து நினைவுகளை வரவழைத்து வெற்றி பெறுகிறார் .
தாய் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள முடியாததை தோழமையுடன் பகிர்ந்து கொள்ள முடியும் .நட்பிற்காக எதையும் விட்டுக் கொடுக்கும் மனம் வரும் .அதனை உணர்த்தும் கவிதை .

வெற்றியைத்
தொடப் போகும்
நிலையிலும்
விட்டுக் கொடுக்கும்
மனப்பாங்கை
உள்ளிருத்தி
ஒளிர்கிறது
தோழமை !

நல்ல தோழமை நம்பிக்கை தரும் .தன்னம்பிக்கை விதைக்கும். என்பதை உணர்த்தும் கவிதை .
எல்லாமே
வெறுத்துப் போய்
எதுவுமே
வேண்டாமென
உதறி நடக்கையிலும்
உடன் வந்து
ஒட்டிக் கொள்கிறது
நீ தந்த நம்பிக்கை !

75 வது என் அப்பாவை சில நாட்களாக காணவில்லை தேடாத இடமே இல்லை. மனம் நொந்து நொறுங்கி எழுத்தையே விட்டு விடுவோம் என்று எண்ணியபோது, தமிழ்த் தேனீ முனைவர்  இரா .மோகன் அவர்கள் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் உள்ளிட்ட நண்பர்கள பலர் தந்த ஆறுதலும், சிறந்த சிந்தனையாளர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் சொன்ன ஒரு வரியும் தான் என்னை திரும்ப இயங்க வைத்தது . " கஷ்டம் இல்லாதவங்க யாருமே இல்லை .உங்க கஷ்டத்திற்காக உடைந்து விடாதீர்கள் ." கவலையால் தொய்வுரும் அனைவருக்கும் இந்த வரி ஆறுதல் தரும் .தோழமைக்கு மிகப் பெரிய ஆற்றல் உண்டு என்பதை உணர்த்தும் உன்னத நூல் .

கல்லூரி காலங்களில் தோழியோடு நட்பாகப் பழகுவதை நண்பர்கள்
சிலர் நட்புதான் என்றாலும் அதையும் தாண்டி ஏதோ உண்டு என்று கேலி பேசுவது உண்டு .அதற்கு விடை சொல்லும் கவிதை நன்று .

உனக்கு நான்தான்
பெண் பார்ப்பேன் என்கிற
உன் குறு செய்தியை
பார்த்த பின்புதான்
விளங்கிக் கொண்டான்
என் நண்பன்
நம் தோழமையை !

ஆண் பெண் பேதமின்றி வளர்ந்த , வளரும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் ,படைப்பாளிகளுடன் எனக்கு தூய நட்பு உண்டு .குறிப்பாக பெண்பாலில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழும் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர், பேராசிரியர் ,சிறந்த ஆய்வாளர் , நூல் விமர்சகர் திருமதி சு .சந்திரா அவர்கள் , சவூதி அரேபியா ,அமெரிக்கா,ஜப்பான் என்று விமானத்தில் பறந்து கொண்டே இருக்கும் எழுத்தாளர் ,கவிஞர் ,நூல் விமர்சகர் திருமதி விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் ,குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள நிலக்கோட்டை என்று பயணமாகி வரும் வளர்ந்து வரும் கவிஞர் திருமதி யாத்விகா அவர்கள் .இவர்கள் எல்லாம் எனக்கு குடும்ப நண்பர்கள். ஆரோக்கியமான இலக்கியத் தோழமைகளை நினைவு கொள்ள வைத்தது இந்த நூல் .

நம்பிக்கை வாசல் மாத இதழ் ஆசிரியர் நூல் ஆசிரியர் , இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

 நன்றி -  கவிஞர் இரா. இரவி

 இவ்விமர்சனத்தை பிற தளங்களில் வாசிக்க...

 http://www.tamilthottam.in/t42643-topic#246635

http://eluthu.com/kavithai/175217.html
.
http://www.noolulagam.com/product/?pid=6802#comment-6279

http://www.eraeravi.com/home/detail.php?id=349&cat=nl



கவித்துளி- நூலாய்வு

கவித்துளி !

மாற்றுத்திறனாளிகள்   குறும்பாக்கள் !

தொகுப்பு ஆசிரியர்            :   கவித்துளி மு .குமார் !

நூல் விமர்சனம்                 : கவிஞர் இரா .இரவி ! 
 
 
                       37 மாற்றுத் திறனாளிகள் குறுந்செய்தி  குறும்பாக்கள் தொகுப்பு நூல். இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் மாற்றுத் திறனாளி மட்டுமல்ல மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் வாசகன் பதிப்பகம் தொடங்கி சிந்தனை விதைக்கும் பல நல்ல நூல்களை தொடர்ந்து பதிப்பித்து வருகிறார் .இந்த நூலும் வாசகன் பதிப்பகம் நூலாக வந்துள்ளது .தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் அவர்கள் நூலை காணிக்கை ஆக்கிய விதத்தில் வித்தியாசப் படுகிறார் .அட்டைப்பட புகைப்படம் மிக நன்று .


சமர்ப்பணம் !
தரணியிலே 
என்னை தவழ வைத்து 
தவழ இயலாதபோது 
தாங்கிப் பிடித்து 
உலகத்தை 
சுட்டிக் காட்டிய 
சுட்டு விரல்களான
என் தாய் தந்தைக்கு ... 
 இனிய நண்பர்களும், ஹைக்கூ கவிஞர்களுமான மு .முருகேஷ், பொன் குமார் ,கன்னிக் கோவில் இராஜா ஆகியோரின்  அணிந்துரை மிக நன்று .
 
நூல் எனும் மகுடத்தில் பதித்தவைரக்கற்களாக மிளிர்கின்றன.முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகள்களின் ஹைக்கூ கவிதைகள் மிக நன்று. சிந்தனைக் குவியலாக சுரங்கமாக உள்ளன .ஒன்றே முக்கால் ஆண்டுகளாக அலைபேசி வழி குறுந்செய்தியாக அனுப்பிய ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து  நூலாக்கி  உள்ளார்கள் .தேனீ  தேன் சேகரிப்பது போல சேகரித்து நூலாக்கி உள்ளார்கள் .தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் இருவரின் உழைப்பை உணர முடிந்தது .

உடலில் குறை இல்லாவிட்டாலும் உள்ளத்தில் குறையோடு வாழ்ந்து வரும் சராசரி மனிதர்கள் அல்ல இவர்கள் .உடலில் குறை இருந்தபோதும்  உள்ளத்தில் குறை இன்றி உழைக்கும் ,சிந்திக்கும் சாதனையாளர்களின் சிந்தனை தொகுப்பு மிக நன்று .பாராட்டுக்கள். மாற்றுத் திறனாளிகளின் ஆற்றலை , திறமையை சிந்தனை நுட்பத்தை பறை சாற்றும் நூல் .

தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் அவர்களின் ஹைக்கூ கவிதையோடு தொடங்கி நூலின் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன்  ஹைக்கூ வோடு முடித்துள்ளனர் .

அலைபேசியின் நன்மை அதிகம் தீமை குறைவு .அதனை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

கவித்துளி மு .குமார் !
உலக உருண்டை 
செவ்வக வடிவமானது 
செல்போன் ! 
.
மனிதர்கள் வரிசையில் நிற்கும்போது சண்டை நடப்பதை பார்த்து இருக்கிறோம் .அக்ரிணைகள் உயர் திணைகளை விட உயர்வாக இருப்பதை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் தகடூர் செவ்வியன் !
ஆறறிவு இல்லாது போயினும் 
சட்டத்தை மீறுவதில்லை 
வரிசையில் எறும்புகள் !

புகைப்பிடிப்பதால் வரும் தீமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

கவிஞர் இளசேட் சென்னி ! 
உன்னை மட்டுமல்ல 
சுற்றியிருப்போரையும் 
சுடுகாட்டுக்கு அனுப்பும் சிகரெட் ! 

சாதிச் சங்ககள் ,அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள் பற்றி எல்லால் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று .

கவிஞர் ம .பாலன்  
பிராந்தி அரை  பாட்டில் 
பிரியாணி ஒரு பொட்டலம் 
பேரணி !

ஹைக்கூ கவிதைக்கான விளக்கத்தையே ஹைக்கூவாக வடித்து சிறப்பு .

கவிஞர் இரா .சுமதி !
அண்டம் சுருக்கி
அணுவுள் புகுத்தும் முயற்சி 
ஹைக்கூ !  

மரத்தின் நன்மையை அவசியத்தை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று மிக நன்று .

கவிஞர் சு .லட்சுமணன் !
மரங்களை வெட்டாதீர் 
குறைகிறது 
மனித ஆயுள் !

ஹைக்கூ கவிஞரின் மனதை படம் பிடித்துக் காடும் ஹைக்கூ  இதோ.
 
கவிஞர் சித்தை  பா .பார்த்திபன் !
தேடுதல் வேட்டையில் 
அரிதாய் சிக்கும் 
சரியான ஹைக்கூ 

மாற்றந்தாய் கொடுமை என்பது சொல்லில் அடங்காது.அனுபவித்தவர்கள்   மட்டும் உணரும் கொடிய வலி  வேதனை .அதனை நன்கு உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் அ. இந்துமதி !
என் அப்பாவுக்கு கதாநாயகி 
எனக்கோ வில்லி 
மாற்றந்தாய் !

அழகியில் பாடுவதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல ஹைக்கூ கவிதைகள்  உள்ளன .
  
கவிஞர் கோட்டை மனோஜ் !
பூக்கள் மலர்வதை 
நான் பார்த்ததில்லை 
ஒரு முறை சிரி !  

இயற்கையின் சினம் உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் தமிழ் இயலன் !
குடிசைகள் மூழ்கின
கோபுரங்கள் நீந்தின 
பிழையானது மழை ! 

படிக்கும் வாசகர்களுக்கு பறவைகளை காட்சிப் படுத்தும் ஹைக்கூ .

கவிஞர் பவானி கண்ணன் !
பறவைகளின் கோடைக்கால 
சுற்றுலாத்தலம் 
வேடந்தாங்கல் !

மூட நம்பிக்கையில்  ஒன்றாகி விட்ட தேர்தல் பற்றிய ஹைக்கூ .

கவிஞர் க .நீலவண்ணன் !
வெளிச்ச த்தைத் தேடி 
இருட்டுக்குள் பயணம் 
தேர்தல் !

சுற்றுச்சுழல் விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ.

கவிஞர் மா .மாணிக்க சந்திரசேகர் !  
முதுகில் குத்துகிறோம் 
வெகுண்டெழுகிறது பூமி 
பூகம்பமாய் !

மூட நம்பிக்கையை உணர்த்திடும் ஹைக்கூ .

கவிஞர் பெ .கவி .பெரியசாமி 
உன் தொழுகைக்குப்பின் 
எங்களூர் மைல் கல்லுக்கு 
தினமும் பூஜை !

ஆலயத்தை விட உயர்வான நூலகம் பற்றிய ஹைக்கூ .

கவிஞர் நா .செல்வராஜ் !
சாதனைகளின் சங்கம் 
சிந்தனைகளின் பிறப்பிடம் 
நூலகம் !

எல்லோருக்கும் எதிர்காலம் சொல்லி கிளி தன் எதிர் காலம் அறியாத சோகம் உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் யாழினி ஸ்ரீ  !
எந்தத் தவறும் செய்யாமல் 
சிறைத் தண்டனை 
கூண்டுக் கிளி  !

இயந்திர மயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வரும் அவலம் .உறவுகளைப் பிரிந்து அயல் நாடுகளில் வாழும் சோகம் .

கவிஞர் ஜி .ஆஸ்டிரின் பிரிட்டோ !
அயல்நாடு மோகத்தில் 
கனவாகிப் போயின 
உறவுகள் !

கொள்ளையோ கொள்ளையாகி விட்ட மணல் கொள்ளை பற்றிய ஹைக்கூ .  .

கவிஞர் கா .இளையராஜா !
பறிபோகும் நீர் ஆதாரம் 
பகல் கொள்ளைக்கு நிகராய் 
மணல் கொள்ளை !
கவிதைகளில் சுவையானது சுகமானது காதல் கவிதை .

கவிஞர் த .நளினி ! 
பொய்யெனத் தெரிந்தும்  
மெய்மறக்கச் செய்கின்றன 
காதல் கவிதைகள் !

எள்ளல் சுவையுடன் மூட நம்பிக்கையைச் சாடும் ஹைக்கூ  .

கவிஞர் தில் பாரதி !
குறுக்கே மனிதன்
சகுனம் பார்த்தது 
பூனை !

மாற்றுத் திறனாளிகளை  சிந்திக்க வைக்கும் ஹைக்கூ .

கவிஞர் பி .கால்டுவெல்  நியூட்டன் !
இபாடிதான் வாழவேண்டுமென 
உடற்குறை த்தாண்டி 
நீயே தீர்மானி !

தன்னம்பிக்கை தரும் விதமாக  ஊக்கம் தரும் ஹைக்கூ .

கவிஞர் நா .முனியசாமி !
பூபாளம் இசைக்கவே 
பூமிக்கு வந்துள்ளாய் 
முகாரி  ஏனோ ?

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் ! மாமழை போற்றும் ஹைக்கூ .

கவிஞர் க .அகிலா பாரதி!
மனிதநேயம் 
மறவா  இயற்கை 
கோடை மழை !

மரத்தின் நேயம் உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் வேம்பை தி . பாலாஜி !
எனக்கான மூச்சுக் காற்றை 
தினமும் தருகின்றன
மரம் மரங்கள் !

தீபாவளியை இவர் பார்க்கும் பார்வை மிக வித்தியாசமானது.

கவிஞர் ஜனசக்தி !
அகில இந்திய 
சுற்றுச்சுழல் மாசு தினம் 
தீபாவளி !

துணிவின் அபசையத்தை அவசியத்தை வாழ்வி அர்த்தத்தை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் க .மாரிமுத்து 
இறக்க ஒரு நொடி போதும் 
வாழ ஒவ்வொரு நொடியும் தேவை 
துணிச்சல் !

பெருகிவரும் கட்டடங்களின் தீமையை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் இரா .ஆறுமுகம் !
பரிதவிக்கிறது பசுமை 
கான்கிரீட் காடுகளின் 
விரிவாக்கம் !

மனிதநேயம் மறந்து  வருவதை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் தி .சுபத்திரா !
எந்திரமான உலகில் 
தேடப்படும் அறிய பொக்கிசமாய்
மனிதநேயம் 

மாற்றுத்திறனாளிகளின் மாண்பை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் உ .சின்னத்துரை !
மற்றவர்களைக் காட்டிலும் 
திறமைகளால் உயர்கிறான் 
மாற்றுத்திறனாளி !
  
காதலில் ஊடல் பற்றிய ஹைக்கூ நன்று .
கவிஞர் துளிர் !
நீயும் நானும் பேசாதபோது 
நமக்காக பேசுகிறது 
காதல் !
 
தங்கம்  விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது .நாட்டில் வன்முறைகளும் நாளுக்கு நாள்  பெருகிக் கொண்டே போகிறது .

கவிஞர் ந  .ஆனந்தஜோதி !
விலை கேட்டால் 
தலை சுற்றும் 
தங்கம் !

ராசிபலன் எழுதி பக்கம் நிரப்பி பணம் பார்த்து வருகின்றன பத்திரிகைகள் .மூட நம்பிக்கை விதைக்கும் ஊடகங்களை  வெட்கப்பட வைக்கும் ஹைக்கூ . 

கவிஞர் இளங்கோ வரதராசன் !
காடும் பகலாவுமாய் மகிழ்வு 
பொங்குமென்று ராசி பலன் 
சாலையோரப் பிச்சைக்காரன் !
கடவுளின் பெயரால் நடக்கும் கலவரங்களை கண்டிக்கும் ஹைக்கூ .

கவிஞர் செ. முருகேசன் ! 
விநாயகர் ஊர்வலம் 
மரணத்தை நோக்கி 
பிள்ளையார் !

குடும்பத்தின் ஏழ்மையை , குடும்பத்தலைவனின் பொறுப்பற்ற தன்மையை உணர்த்தும் ஹைக்கூ .

கவிஞர் சு .ஆரோக்கிய மேரி !
தாலி கட்டியவனோ எந்நேரமும் 
டாஸ்மாக் தண்ணீரில் 
மனைவியோ கண்ணீரில் !

விலைவாசி உயர்வு ஏழைகளை வாட்டுகிறது .விலைவாசி ஒருவழிப் பாதையாக ஏறுகிறது ஆனால் இறங்குவதே இல்லை .

கவிஞர் பொன் .முரு .காமராசன் .
மனிதநெரிசலில் 
சிக்கி தவிக்கிறது 
விலைவாசி ! 

சாலைகள் போடுவதிலும் ஊழல் நடக்கிறது .அதனால் குறுகிய நாட்களில் சாலை குண்டும் குழியுமாகி விடுகிறது .

கவிஞர் இரா .பாக்யராஜ் !
சின்னச்சின்ன குளங்கள் 
சாலை முழுவதும் 
தொடர் மழை ! 

இந்த நூலின் வெற்றியைப் பறை சாற்றும் ஹைக்கூ .

நூலின் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் !
முயற்சி ஊன்றுகோல் துணையுடன் 
துளித்துளியாய் சாதனை 
கவித்துளி பயணம் !

மொத்தத்தில் மாற்றுத்திறனாளிகள்  மட்டற்ற படைப்பாளிகள் என்பதை பறை சாற்றும் நூல் .தொகுப்பு நூலில் பங்குபெற்ற 37 படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .



நன்றி
கவிஞர் இரா .இரவி
 
 
 
இவ்விமர்சனத்தை பிற தளங்களில் வாசிக்க...